பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை கொல்லங்குடி உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லங்குடி கருப்பாயி. இவர் கடந்த 1985ம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளியான 'ஆண் பாவம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்திருந்தார். இவர் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : Gold Rate Today | ஷாக் மேல ஷாக்… தங்கம் விலை அதிரடி உயர்வு… ஒரு சவரன் இவ்வளவா?
நாட்டுப்புற பாடகியான இவர் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார். திரைப்பட பாடல் ஒலிப்பதிவுக்காக மதுரை செல்லும்போது, இவரது கணவர் இறந்ததால் இவர் திரைத்துறையிலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
அவரது ஒரே மகளும் சாலை விபத்தில் உயிரிழந்ததால் மிகுந்த மன வேதனையில் இவர் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்த கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 99. இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் தற்போது கொல்லங்குடியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொல்லங்குடி கருப்பாயி அம்மாளிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அதற்கு கொல்லங்குடி கருப்பாயி, "எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பட்டா வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாக உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார் என்பார் குறிப்பிடத்தக்கது