“சென்னை மழையின் போது செயல்பட்ட அனுபவத்தை கொண்டு தென்மாவட்ட மக்களை காப்போம்” - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!
சென்னை மழையின்போது செயல்பட்ட அனுபவத்தை கொண்டு தென்மாவட்ட மக்களை உறுதியாக காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.
13 அரசு துறைகள் வாயிலாக மக்களுக்கு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களுடன் முதல்வர்" திட்டம் எனது நேரடி கண்காணிப்பின் கீழ் வருகிறது. கோவையில் உலக தரத்தோடு செம்மொழி பூங்கா அமைய உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும். ஏழை மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை வலுவடைய வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் தட்டி கழிக்க கூடாது. மக்களின் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வுகளை அளிக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும். சென்னை மழையின்போது செயல்பட்ட அனுபவத்தை கொண்டு தென்மாவட்ட மக்களை உறுதியாக காப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.