இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது 10% ஒப்பந்தங்கள் கூட நிறைவேறவில்லை - முதலமைச்சர் #MKStalin!
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 10% கூட நிறைவேறவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கூடி மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. இந்த பயணம், எனது தனிப்பட்ட பயணம் அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாக இது அமைந்திருக்கிறது. 17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி உள்ளேன். அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன.
ரூ.7,618 கோடி முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு உள்பட பல மாவட்டங்களுக்கு பயன் கடைக்கும். சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும் சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
எங்களது பேச்சுவார்த்தை மூலம், சென்னையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி. முதலீடுகள் தொடர்பாக சட்டசபையில் எடுத்து கூறி உள்ளோம் என அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற போது, 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை.. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானம்” நான் சட்டசபையில் பேசியவற்றை இபிஎஸ் படித்து பார்க்க வேண்டும்.‘ என்றார்.
பாமக தலைவர் உள்பட பலர் அமெரிக்க முதலீடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ளார்களே என்ற கேள்விக்கு, முதலீடுகள் குறைவு என கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்றார்.
கோவையில் ஜிஎஸ்டி குறைகேட்பு கூட்டத்தில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் கூறிய கருத்து அதனால் எழுந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடவடிக்கையை மக்கள் கவனித்து வருகிறார்கள் என்றார்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு, அந்த மாநாடு அரசியல் மாநாடு இல்லை என்பதை திருமாவளவனே தெளிவுபடுத்தி உள்ளார் என்று பதில் அளித்தார்.