சாகித்ய அகாடமி விருது: யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சாகித்திய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் யூமா வாசுகி மற்றும் லோகேஷ் ரகுராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யூமா வாசுகி எழுதிய 'தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதை தொகுப்பிற்காக பால் சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள அவர், தற்போது 'தன்வியின் பிறந்தநாள்' நூலுக்காக பால்சாகித்ய புரஸ்கார்க்கும் (BalSahityaPuraskar) தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார்க்குத் (YuvaPuraskar) தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் எனது பாராட்டுகள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.