கடமைக்கு அளவு இல்லையா? கொட்டும் மழையில் தார் சாலை அமைத்த ஊழியர்கள்!
ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் கொட்டும் மழையிலும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சௌராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், ஜூலை 2 முதல் 4-ம் தேதி வரை குஜராத் முழுவதும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே தேதிகளில் மத்திய மகாராஷ்டிராவின் காட் பகுதிகள், கொங்கன், கோவாவிலும், ஜூலை 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, கர்நாடகாவில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் கொட்டும் மழையிலும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு கலவையான விமர்சனங்களை சமூக வலைதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.