சிட்னி டெஸ்ட் | நாளைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா?
சிட்னி டெஸ்டில் கேப்டன் பும்ரா தொடர்ந்து விளையாடுவாரா? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களில் சுருண்டது.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா காயம் காரணமாக ஆடுகளத்தில் இருந்து பாதியிலே வெளியேறினார். அவருக்கு பதிலாக இந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அணியை வழி நடத்தினார்.
இந்த சூழலில், இந்திய அணியின் கேப்டன் பும்ரா நாளைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இன்றைய ஆட்டத்திற்கு பின் இந்திய அணி வீரர் பிரசித் கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"இந்திய அணியின் கேப்டன் பும்ராவுக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஸ்கேன் செய்ய சென்றார். மருத்துவக்குழு அவரை கண்காணித்து வருகிறது. அவர்கள் அனுமதி கொடுத்தார் பும்ரா நாளைய ஆட்டத்தில் விளையாடுவார்"
இவ்வாறு பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார்.