இஸ்ரேலில் பற்றி எறியும் காட்டுத்தீ - 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!
இஸ்ரேல் நாட்டில் பல்வேறு நகரங்களில் நேற்று காட்டுத்தீ பரவியுள்ளது. தொடர்ந்து பரவி வரும் தீயால் தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் பயங்கர காற்றினால் இந்தக் காட்டுத்தீ ஜெருசலேம் நகரை அடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெருசலேமின் புறநகர் பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான குடிமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான, முதல் சாலையோரம் தீ கட்டுக்கடங்காமல் பல அடி உயரத்திற்கு கரும்புகையை கக்கிக் கொண்டு கொளுந்து விட்டு எரிகிறது.
இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும், 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், "இந்தக் காட்டுத் தீயானது தேசிய அளவிலான அவசரநிலை எனவும் ஜெருசேலமைப் பாதுகாப்பதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அங்கு கூடுதலான தீயணைப்பு வாகனங்கள் இயக்கப்பட்டு, தீ பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான முக்கிய நெடுஞ்சாலையில் காட்டுத் தீ பரவியதால் அங்கு சென்று கொண்டிருந்த வாகனங்களை நடுவழியிலேயே விட்டுவிட்டு மக்கள் ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேலிய தீயணைப்புப் படையுடன், அந்நாட்டு ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. மேலும், தீக்காயங்களினாலும் புகையினாலும் பாதிக்கப்பட்ட 23 பேரில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தான சூழலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் உதவியுடன் 120 தீயணைப்புக் குழுக்கள் போராடி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 22 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.