கோப்பையை வெல்லப்போவது யார்? - இறுதிப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஜுன் 3) நடைபெற உள்ளது. இதில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதல் பெங்களூரு அணி, இதுவரை 4 முறை (நடப்பு ஐபிஎல் தொடரையும் சேர்த்து) இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோதிலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்நிலையில் கோப்பையை வெல்லும் கனவோடு நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் பெங்களூரு அணி நுழைந்துள்ளது. அதுபோல கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இரண்டு அணிகளும் கோப்பையின் வெல்லும் நோக்கத்தோடு களமிறங்குவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பரபரபுக்கு பஞ்சம் இருக்காது. முதல்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.