தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வந்தார். அந்த வகையில் இந்தாண்டு முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழா கடந்த 30ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவ மாணவியருக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிலையில், நாளை 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேரில் அழைத்து, விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக கடந்த 30.05.2025 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாவது கட்ட விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (04.06.2025) நடைபெற உள்ளது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். எதிர்காலச் சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.