தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள்தான் - விருது வழங்கும் விழாவில் மாணவர்களிடையே தவெக தலைவர் விஜய் பேச்சு!
தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள்தான் என விருது வழங்கும் விழாவில் மாணவர்களிடையே தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை தந்தனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
“ நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த எனது தம்பி, தங்கைகளுக்கும், பெருமிதத்தோடுவிழாவிற்கு வந்துள்ள அவர்களின் பெற்றோர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமான பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக தோழர்களுக்கும் வணக்கம்.
இதன்பின்னர் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் 100% உழைப்பை செலுத்த வேண்டும். ஆசிரியர்கள், கலந்தாய்வு கொடுக்கும் நபர்களிடம் உங்களின் விருப்பமான துறைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
மாணவர்களாகிய நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். எது உண்மை எது பொய் என்று ஆராய வேண்டும். மாணவர்கள் தவறான பாதையில் மட்டும் செல்லக்கூடாது. அதன் மூலம் மாணவர்கள் தங்களது அடையாளத்தை இழந்து விடக்கூடாது. தற்போது தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது.
மாணவர்களாகிய நீங்கள் படிக்கும்போதே மறைமுக அரசியலில் ஈடுபட வேண்டும். தற்போது இரண்டு விதமான ஊடகங்கள் செயல்படுகின்றன. பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள ஊடகங்கள் என இவையிரண்டும் மக்களிடம் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. எனவே எது செய்தி.. எது கருத்து என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். " இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.