“மாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய்” - அகழாய்வு நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எம்எல்ஏ எழிலன் பேட்டி!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று(ஜூன்.20) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசிதாவது. “நான்கு நாட்களாக பல பொய்கள் திமுகவும் அவருடைய அணிகளும் கீழடி என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்கள். அகழ்வாராய்ச்சி செய்த ஒரே இயக்கம் அதிமுக இயக்கம் தான். ஆராய்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் 39 இடங்களில் ஆராய்ச்சி நடக்கிறது. அதில் 33 இடங்களில் அதிமுக தொடங்கியது பல இடங்களில் அகழாய்வு பணி மேற்கொணது அதிமுக ஆட்சி தான். இன்றைக்கு 8 இடங்களில் ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது. கீழடிக்கு அருங்காட்சியகம் திறந்து வைத்தது அதிமுக தான். அகழாய்வு பணிக்கு ஒரு ரூபாயை கூட திமுக அரசு ஒதுக்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஆண்டுக்கு 105 கோடி ரூபாய் ஒதுக்கினோம். அதிமுக ஆட்சிக்கு வந்த உடனே அந்த பணிகளை தொடங்கினோம்.
அதிமுக ஆட்சி காலத்தில் ஐந்து கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கீழடி என்பது உலக தமிழர்கள் மத்தியில் பேசப் பொருளாக மாற்றியது அதிமுக ஆட்சியில் தான் . கீழடியை முதலமைச்சர மு.க. ஸ்டாலின் முதல் முதலில் கண்டுபிடித்தது போல் பிம்பத்தை உருவாக்க கூடாது.
திமுக சமர்ப்பித்த அறிக்கையில் முரண்பாடான கருத்துக்கள் உள்ளது. கீழடியில் 5 ஆண்டுகளில் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். எல்லாவற்றையும் கண்டுபிடித்துள்ளோம். அவர்கள் கொடுத்த ஆய்வறிக்கையில் மத்திய அரசு கேட்ட கேள்விக்கும் இவர்கள் கொடுத்த பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. இதிலும் திமுக அரசு தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. தமிழர் நாகரிகம் எல்லா நதிகளிலும் சார்ந்து இருக்கிறது. அதேபோல கடல் சார்ந்தும் இருக்கிறது. கீழடி என் தாய்மடி என்று எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாருக்கு சொல்ல உரிமை இருக்கிறது?” என்று கூறினார்.
இந்த நிலையில் மாஃபா பாண்டியராஜனின் பேச்சுக்கு திமுக எம்எல்ஏ எழிலன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டியில், “பாஜக அரசு வந்த பிறகு 2014ல் அமர்நாத் தலைமையில் இந்திய தொல்லியல்துறை கீழடியில் அகழாய்வு மேற்கொண்டனர். மூன்று கட்டங்களாக நடந்த அந்த பணிகள் நடந்தது. இதனிடையே இந்திய தொல்லியல்துறை ஆய்வை நிறுத்தச் சொன்னார்கள். பிறகு தனியார் நிலம் பாதிப்படைவதாக நிறுத்தச் சொன்னார்கள். பின்னர் அமர்நாத் அசாமுக்கு மாற்றப்பட்டார். அந்த நேரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கீழடிக்கும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் தொடர்பிருப்பதாக கூறினார். இது மறைக்கப்பட்ட வரவாற்றை மாற்றியமைக்கும் வகையில் இருந்தது.
அமர்நாத் அப்போது ஆய்வு மேற்கொண்டபோது தங்கம் தென்னரசும், கனிமொழியும் ஆய்வு பணிகளை பார்வையிட்டனர். பின்னர் கனிமொழி இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அப்போது அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது என்று இந்திய தொல்லியல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது அதிமுக, மத்திய அரசால் நடந்தப்படும் இந்த அகழாய்வு பணியில் பெரிய அளவில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தது. பின்னர் மைசூரில் இருக்கும் தொல்லியல் பொருட்கள் மீண்டும் மதுரைக்கு கொண்டுவர வேண்டும், அதனை பாதுகாக்க ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக செயல்பட்டது.
முதன்முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் கீழடி கார்பன் அறிக்கையை சட்டமன்றத்தில் தெரிவித்தார். நிதியைப் பற்றி தவறான கருத்துகளை அதிமுகவினர் தெரிவித்தனர். உதயகுமார், ரூ. 55 லட்சம் ஒதுக்கியதாக சொல்லியுள்ளார். மாஃபா பாண்டியராஜன், ரூ. 105 கோடி ஒதுக்கியதாக சொல்லியுள்ளார். ஆனால், அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை இரு அகழாய்வுக்குத்தான் நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அகழாய்வுக்கு ரூ. 55 லட்சமும், கீழடிக்கு ரூ. 55 லட்சமும் என இரண்டைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், 105 கோடி ரூபாய் செலவு செய்ததாக அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் 2021 முதல் 2024 வரை மொத்தம் 30 இடங்களின் ஆய்வுக்காக ரூ. 26 கோடி செலவு செய்துள்ளது" என்று கூறினார்.