"நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்" - வைரமுத்து பதிவு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.ஆர்.கவாய் மீது அநாகரிகத்தை வீசமுயன்றது கண்டு அதிர்ந்துபோனேன். இது முறைசெய்யும் நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும். வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை என்று அறிகிறேன். தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள். அந்தச் சாத்திரத்தின் ஆத்திரம்தான் இது.
காலில் அணியவேண்டியதைக் கையில் அணிந்தபோதே அவர் அறிவழிந்துபோனார் என்று அறிய முடிகிறது அதை மென்மையாகக் கையாண்ட நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம். நீதியரசரின் மாண்பு அவரை மன்னித்துவிட்டது. வீச முயன்ற பொருளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது. வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம் அவர் பேசியபொருளை மறந்துவிட முடியாது. அது நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும். பழையன கழிய வேண்டாமா?”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.