"கேலி, கிண்டல்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 32 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். 32 இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,
"இந்து அறநிலையத் துறை சார்பில் நடைபெறவுள்ள திணமத்தை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் இதுவரை இந்த அறிநிலையத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தான் அதிகமாக பங்கேற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் 2,376 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்து சமய அறிநிலையத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது. பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது.
எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு 3,177 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ஆயிரம் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அடியார்க்கு அடியார்போல் அமைச்சர் சேகர்பாபு உழைத்து வருகிறார்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் திமுக அரசு இது போன்ற சாதனைகளை செய்து வருகிறது. வெறுப்பையும், சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களைக் கொண்டவர்களால் இதனை சதித்துக் கொள்ள முடியவில்லை. பக்தியின் பேரில் பகல் வேஷம் போடுபவர்களால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உண்மையான பக்தர்கள் நம் ஆட்சியின் ஆன்மிக தொண்டை பாராட்டுகின்றனர். கேலி, கிண்டல்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை. தொடர்ந்து உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.