"உரிமையைக் கேட்கிறோம், உபகாரமல்ல" - மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இன்று தொடங்கிய காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. தமிழ்நாடு அரசு அரசியல் உள்நோக்கத்தாலே ஏற்க மறுக்கிறது. நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாடு அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், "உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல" என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
"இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். " - பேரறிஞர் அண்ணா"
இவ்வாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.