தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம்! வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நிறைவு பெற்றது.
இந்நிலையில் தொகுதிவாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 135 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும் 76 பெண்களும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. அதேபோல குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்கள் கொண்ட நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும்.