விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 14-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்தனர். திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் அன்னியூர் சிவா (திமுக), சி.அன்புமணி (பாமக), அபிநயா (நாதக) உள்ளிட்ட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று (ஜுன் 26) பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், யாரும் மனுவை திரும்பப் பெறாததால் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்கிடையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக, தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், தற்போது பாமகவுக்கு பாம்பழம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.