"தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தி விஜயகாந்த்" - தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி
"தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தி விஜயகாந்த்" என தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரஜினிகாந்த் படப்பிடிப்பில் உள்ளதால் இன்று காலை தூத்துக்குடியிலிருந்து அஞ்சலி செலுத்த வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
“ அன்பு நண்பர் விஜயகாந்த் மறைந்தது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் மன உறுதி உள்ள மனிதர். எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது. விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.