அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்... கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக!
தவெக சார்பில் ஏப். 26 மற்றும் ஏப். 27ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் பூத் ஏஜெண்ட் கருத்தரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளத்தாவது,
"தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு வணக்கம்!
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது. நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் கட்சித் தலைவரின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கட்சி மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கட்சி மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பங்கேற்பார்கள்.
இந்தக் கருத்தரங்கில், நம் கட்சித் தலைவர் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான்.
எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் தலைவரின் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம், வாகை சூடுவோம்!"
இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.