”வன்னியர் சங்க மகளிர் மாநாடு மாபெரும் வெற்றி”- பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.அவர் பேசியது,
”பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்க மகளிர் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள். இதனைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள பாமகவின்
சிறப்பு பொதுக் குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவாகவும் யாரும்
நடத்தாத வகையில் நடைபெற உள்ளது. சென்னை திருமங்கலம் அண்ணா நகரில் சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்துள்ளார்கள் என்ற செய்தி அறிந்து துடித்து போனேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுமியின் சமூக வலைத்தளங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாக அறிந்தேன். சமூக வலைத்தளங்களை உயர்விற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு வேறு எதையோ பார்த்து வருகிறார்கள். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது.
அப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அகழாய்வில் தமிழ்நாடு எப்போதுமே முன் மாதிரி மாநிலம் தான். கீழடி, பொற்கை, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டமும் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும், கெளரவ தலைவர் மணியையும் திட்டமிட்டு ஒரு கும்பல் அவதூறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.போற்றுவோர் போற்றட்டும்.புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்.மக்களுக்கு பயன்படும் அரிசியாக நாங்கள் இருக்கிறோம். பதராக அவர்கள் இருக்கிறார்கள். பதர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள்” என்று தெரிவித்தார்.