வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையிலான ரயில் வழித்தடம் சீரமைப்பு! ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!
வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையிலான ரயில் வழித்தடம் சீரமைக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் மீளவிட்டான் - தூத்துக்குடி இடையிலான ரயில் வழித்தடத்தில் கூடுதலாக தண்ணீா் தேங்கி காணப்பட்டது. மேலும், தூத்துக்குடி பணிமனையில் வெள்ளநீா் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் தேங்கியிருந்த தண்ணீா் முழுவதுமாக அகற்றப்பட்டு ரயில் இயக்க வழிவகை செய்யப்பட்டது.
இதையடுத்து, மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் வழக்கம் போல் இயக்கப்படும். முன்னதாக, இந்த ரயில் விருதுநகருடன் நிறுத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டி பராமரிக்கும் வசதிகள் சீரமைக்கப்படாததால் முத்துநகா் ரயில் ஏற்கெனவே அறிவித்தது போல் மதுரையுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.