ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இறுதியாக 1,17,158 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெறுவோர் டெபாசிட் தொகையை தக்க வைப்பர். அதன்படி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் தொகை பெறுவதற்கு 25,777 வாக்குகள் பெற வேண்டிய சூழலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை பெற முடியாததால் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. அதேசமயம் 75% வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சந்திரகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.