அமெரிக்கா : ஊழியர்கள் பற்றாக்குறையால் 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் இடையூறுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்துத்துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.
குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், சம்பளமில்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களில் பலர் உடல் நிலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்துள்ளனர். இதையடுத்து, போதிய பணியாளர்கள் இல்லாததால், விமான போக்குவரத்தை ஆணையத்தால் பாதுகாப்பாக கையாள முடியவில்லை.
இதையடுத்து ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்களின் விமான இயக்கத்தை குறைத்த நிலையில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன. அட்லாண்டா, டென்வர், நியூவார்க், சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 40 முக்கிய விமான நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகியது.
பணியாளர் பற்றாக்குறையால், 40 முக்கிய விமான நிலையங்களில் 4 சதவீத விமானங்களை குறைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலை தொடர்ந்தால் 20 சதவீதம் வரை விமானங்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சீன் டபி தெரிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.