ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வர்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வெள்ளை மாளிகை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
வர்த்தக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?.
வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு தனித்தனி வழக்குகளை அடிப்படையாகக் கொண்டது. அதிக வரிகள் விடுக்கப்பட்ட நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் பல சிறு வணிகங்களின் சார்பாக, லிபர்டி ஜஸ்டிஸ் நிறுவனம் ஒரு வழக்கை தொடர்ந்தது. மற்றொரு வழக்கு, அமெரிக்க மாகாணங்களின் சார்பில் இறக்குமதி வரிக்கு எதிராக தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1977 (IEEPA) சட்டம், அதிக இறக்குமதி வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கவில்லை என தெரிவித்தனர். மேலும் சீனா, மெக்சிகோ, கனடா நாடுகளுக்கு ட்ரம்ப் அரசு விதித்த கூடுதல் வரிகளுக்கும் தடைவிதித்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து வெள்ளை மாளிகை மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை ஏற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை ட்ரம்ப் பதிவிட்டார். அதில், அமெரிக்காவின் அதிபர், அமெரிக்காவை பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியாக தீங்கு விளைவிப்பவர்களிடமிருந்து பாதுகாக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.