ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் - 38 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 51 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால், ஏமனில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல், அமெரிக்கா அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஏமனில் அமெரிக்கா இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
அந்த வகையில், ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 102 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருள் சப்ளையை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.