Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TVK மாநாடு | கட் அவுட் முதல் எல்இடி திரைகள் வரை… பிரம்மாண்ட ஏற்பாடுகளால் விழாக்கோலம் பூண்ட விக்கிரவாண்டி!

10:42 AM Oct 26, 2024 IST | Web Editor
Advertisement

தவெக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளால் விக்கிரவாண்டியில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் நாளை (அக்.27) நடைபெறும் நிலையில் தற்போது மாநாட்டுக்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தவெக மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

தவெக மாநாட்டுக்கான பந்தல், மேடை , விளக்குகள் அமைக்கும் பணிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். இந்த மாநாட்டுக்காக 170 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் செயின்ட் ஜாா்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தவெக கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றுவதற்காக மாநாட்டு திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தவெக தலைவர் விஜய் மேடையிலிருந்து நடந்து சென்று தொண்டர்களை சந்திப்பதற்காக சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் பகுதியில் சுமாா் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமாா் 300 தற்காலிக குடிநீர் தொட்டிகளும், 350 நடமாடும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டின் முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரும் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 600-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்பட்டு அதில் 15 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

இது தவிர, கட்சித் தலைவர் விஜய் செல்வதற்காக சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் பிரத்யேகமாக சிறப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் செல்லும் சிறப்பு சாலையில் யாரும் நுழையாமல் இருக்க 10 அடியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 10 ஆயிரம் தொண்டர்கள் சீருடையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளன. அதனுடன், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கென தண்ணீர், கழிவறை மற்றும் அவர்களுக்கு உதவும் வகையில் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறக்கூடிய பகுதியில் வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்டோரின் கட் அவுட்களுடன் விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
மாநாட்டில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல் சிக்னல் கோளாறு ஏற்படாத வண்ணம் தற்காலிக செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு 207 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு 4 பகுதிகளில் வாகன பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்துக்கொள்பவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாதவாறு, 5 நுழைவு வாயில்களும், வெளியேறுவதற்கு 15 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரக்கூடியவர்கள் யாரேனும் தவறும் பட்சத்தில் அவர்களை கண்டுபிடிப்பதற்கு missing zone அமைக்கப்பட்டுள்ளது.

மேடையில் நடைபெறும் நிகழ்வு மற்றும் கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சை அனைவரும் பார்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாநாட்டு பந்தல் மற்றும் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கான பணிகள் நடைபெறக்கூடிய பகுதியில் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல் கட்சியின் தலைவர் விஜய்க்கு தனியாக துபாயிலிருந்து 30க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநாடுக்கு வரக்கூடிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாநாட்டு பந்தலுக்குள் காலை 11 மணி முதல் மாநாடு முடியும் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு காலை முதல் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் மதியம் 3 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வருவார் என்றும் அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடியினை 100 அடி கம்பத்தில் ஏற்றுவார் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் பின்னர் மற்ற முக்கிய பிரமுகர்கள் உரையாற்றுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது. நிறைவாக விஜய் மாலை 6 மணிக்கு மேல் மேடைக்கு வருவார் என்றும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் கட்சியின் கொள்கை செயல்திட்டம் தொடர்பாக விரிவான உரையை நிகழ்த்துவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்news7 tamilThalapathythalapathy vijaytvkTVK Vijayvijay
Advertisement
Next Article