“நாளை 7.72 லட்சம் பேர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்” - அமைச்சர் அன்பில் மகேஸ்!
தமிழ்நாட்டில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,72,200 பேர் எழுத உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3,58,201 மாணவர்கள், 4,13,998 மாணவிகள், திருநங்கைகள் என மொத்தம் 7,72,200 பேர் தேர்வு எழுதுகின்றனர். 7534 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 3302 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
கொரோனாவிற்கு பிறகு மாணவர்கள் அதிகளவில் மீண்டும் பள்ளிக்கு வரத்தொடங்கியுள்ளனர். கடந்த முறை இடைநிற்றலை தடுக்க மாணவர்களை அழைத்து பேசி மாணவர்களின் பயத்தை போக்கி ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. நான் முதல்வன் திட்டம் சிறப்பாக உள்ளது. எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பால் பொதுத் தேர்வுக்கு எந்த பாதிப்பும் வராது.