திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்பாதை சீரமைப்பு! நாளை சோதனை ஓட்டம்!
திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் 28 நாட்களுக்கு பிறகு நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ரயில் நிலையம் மற்றும் தண்டவளப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கின. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்: மண்ணச்சநல்லூர்: பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!
மேலும் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே உள்ள தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை முற்றிலுமாக சேதமடைந்து இருந்தது. அதன் காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தாதன்குளம் ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 28 நாட்களுக்கு பிறகு நாளை (ஜன.6) திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.