Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

11:17 AM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா
தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisement

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 14-ம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.  விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தொடர்ந்து 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  9-ம் நாளான நேற்று (பிப்.22) சுவாமி வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  திருவிழா நாட்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் நாள் தேரோட்டம் இன்று காலையில்
நடைபெற்றது.  இதனையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோயில் நடைதிறக்கப்பட்டது. பின்பு 4.30 மணியளவில் விசுவரூப தீபாரானையும்,  5 மணியளவில் உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து மாசித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது.

முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.  இந்த தேரானது
ரதவீதி நான்கிலும் பவனி வந்தது.  இதனைத்தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது.  இந்த பெரிய தேரை மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் 'அரோகரா' பக்தி கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  இதனையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது.  பின்னர் தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது.  இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறுகிறது.

Tags :
#தேரோட்டம்மாசித்திருவிழாதிருச்செந்தூர்devoteesMasi FestivalSubramania Swamy Templetiruchendur
Advertisement
Next Article