’பைசன்’ படத்தின் கதை இது தான் - இயக்குனர் மாரி செல்வராஜ்..!
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கும் படம் பைசன். இப்படத்தில் துருவிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்ஜித்தின் நீலம் புரெடக்ஷன் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் ’பைசன்’ பட உருவாக்கம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது,
"பைசன்" என் கரியரில் முக்கியமான படம் . பதற்றமான தென்தமிழகத்து
இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் "பைசன்". மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன்.
இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது , பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது. இந்தபடத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ்விக்ரம், தயாரித்த பா.இரஞ்சித் அண்ணன் , நடித்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இந்தக்கதையை அவ்வளவு எளிதாக ரெகுலர் சினிமா சூட்டிங் மாதிரி பண்ணிவிடமுடியாது, ஒருவருடம் பயிற்சி செய்து முழு கபடி வீரராக, தென் தமிழகத்து கிராமத்து இளைஞனாக மாறுவதும், கடுமையான உடல் உழைப்பும் தேவைப்பட்டது. படம் துவங்கி கொஞ்ச நாளில் துருவால் முடியவில்லை.ரொம்ப கஸ்டப்பட்டான். வேறு கதை பண்ணிடலாமான்னு அவனிடம் கேட்டேன்.
"இல்லை கஸ்டமாத்தான் இருக்கு, நீங்களும் இந்த படம் பண்ணனும்னு வெறியா இருக்கீங்க, உங்களுக்கு கனவுப்படம்னு தெரியுது, நான் உங்களை அப்பா மாதிரி நினைச்சுகிட்டு வரேன், நீங்க என்ன பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்"
என்று சொன்னான் அந்த வார்த்தைகள் என்னை அசைத்துப்பார்த்துவிட்டன.
அவனுக்கு எதுவும் நடந்துவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொண்டேன்.
நான் மற்றபடங்களை விட அதிகபட்சமான உழைப்பை போட்டேன்.
எல்லாத்தையும் நான் நல்லபடியாக செய்துமுடிப்பேன் என்று நம்பினான்.
மொத்த குடும்பமும் நம்பியது.
எல்லா நடிகர்களும் இதை செய்யமாட்டாங்க இரண்டுவருடங்கள் பயிற்சி எடுத்து, படப்பிடிப்புக்காக நிறைய நாட்கள் ஒதுக்கி முழுமையாக அர்பணித்திருக்கிறார் துருவ். படம் பார்த்தால் இதன் அசல் தன்மை தெரியும்.
என் நலன்விரும்பிகள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு "நீ சாதிச்சிட்ட நினைச்சதை அடைஞ்சிட்டேன்னு" சொன்னாங்க. தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார் என்றும் அவரின் சினிமா ஆரம்பமாகிவிட்டது என்றும் ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் சொன்னார்கள். அதை கேட்ட எனக்கும் துருவுக்கும் பெரும் மகிழ்ச்சி.. அதையே மக்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.