திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்காக மாவட்ட ஆட்சியரால் கடைசி
நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவை
பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்வதை தடுக்க கூடாது, பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது, மேலும் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சுந்தரவடிவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது.
பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் 144 தடை உத்தரவு உள்ளதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனில் வேறு எந்த நாளில் எந்த இடத்தில் அனுமதி வழங்குவீர்கள்? என அரசு தரப்பு வழக்கறிஞர் மதுரை மாநகர் காவல்துறையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து பிற்பகலில் நடைபெற்ற விசாரணையில் மதுரை பழங்காநத்தத்தில் இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து
முன்னணி போராட்டம் நடத்த அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசக் கூடாது, போராட்டத்தில் ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஆர்ப்பாட்டம் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.