"அரசியல் லாபத்திற்காக திமுக அரசு மீது அவதூறு பரப்புகின்றனர்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
"புதுக்கோட்டை மாவட்டம் குகைக்கோயில், கல்வெட்டு, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்கது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆண்டில் ரூ.11,481 கோடியில் 38.35 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரசியல் லாபத்திற்காகவும் வயிற்றுப்பிழைப்பிற்காகவும் திமுக அரசு மீது சிலர் அவதூறு பரப்புகின்றனர்.
அவதூறு பரப்புவோருக்கு முதல் ஆளாக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்து வருகிறார். சாதி அடையாளமாக சூட்டப்பட்ட விடுதிகளின் பெயரை சமூகநீதியின் அடையாளமாக மாற்றியவர் அமைச்சர் மெய்யநாதன். பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்து தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர செய்துள்ளது திராவிட மாடல் அரசு"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.