சிறைகளில் சாதிரீதியான பாகுபாடு கூடாது - தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி தொடர்பான தகவல்களை சிறைத்துறை காவலர்கள் கேட்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள சிறையில் ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சாதி ரீதியாக கைதிகளை வகைப்பாடு செய்யக்கூடாது என சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்துறைச் செயலர் தீரஜ்குமார், அரசிதழில் வெளியிட்ட அறிக்கையில்,
“சிறைக்கு கைதிகள் வரும்போது, சாதி குறித்த தகவல்களை கேட்டுப்பெறக்கூடாது. பதிவேடு, ஆவணங்களில் சாதி விவரங்களை இடம்பெறச் செய்யக்கூடாது.
சாதி அடிப்படையில் பிரிவினைக் காட்டவோ, பிரித்து வைக்கவோ கூடாது. சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது. குறிப்பாக, மனிதக் கழிவுகளை சுத்தம் செய்ய வைப்பதோ, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடச் செய்வதோ கட்டாயம் கூடாது.” இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.