“வீர தீர சூரன் படத்தை வெளியிட தடை இல்லை” - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுநீள ஆக்ஷன் திரைப்படமான இது ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் தற்போதுதான் முதலில் வெளியிடுகிறார்கள்.
இந்த சூழலில் இன்று வெளியாக இருந்த இந்த படத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பி4யு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி மன்மீத் பிரீத்தம் சிங் அரோரா முன்பு இன்று(மார்ச்.27) விசாரணை நடைபெற்று வருகிறது. முதலில் இப்படத்தை காலை 10.30 மணிவரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் காலை வெளியாகவிருந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், படக்குழு 7 கோடி பணத்தை 48 மணி நேரத்தில் மனுதாரருக்கு டெப்பாசிட் செய்ய வேண்டும் என்று கூறி 4 வாரத்திற்கு படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்து.
இதையடுத்து இருதரப்பு எழுத்துபூர்வ ஒப்பந்தம் செய்து அதன் பிராமண பத்திரத்தை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியதையடுத்து, ரூ 2.5 கோடி ரூபாயை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் என்றும் மூன்று நாட்களுக்கு சேட்டிலைட் உரிம ஆவணங்கள் வழங்கப்படும் என்றும் படக்குழு தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இப்படத்தை வெளியிடத் தடை இல்லை என தீர்ப்பளித்தார்.