“தீப்பிழம்பாய் வருகிறான் தெக்கத்தி காளமாடன்” - ‘பைசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட் ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்த நிலையில் ‘பைசன்’ படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தீப்பிடித்து எரியும் வனத்திற்குள்ளிருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான் தெக்கத்தி காளமாடன் (பைசன்)” என்ற வரிகளை குறிப்பிட்டு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.