"நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல்" - அமைச்சர் ரகுபதி பதிவு!
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கோவைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிற விவகாரத்தில் குற்றத்தோடு தொடர்புடைய 7 மாணவர்கள் உடனடியாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனையை திமுக அரசு பெற்றுத்தரும். பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து பெண்களைப் பாதுக்காக்கவே தமிழ்நாடு முதலமைச்சர் சட்டங்களை கடுமையாக்கியுள்ளார்!
தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் காரணமாகவும், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையாலும் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுப்பதற்கான திமுக அரசு எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை நாட்டு மக்கள் அறிவார்கள். பெண்களைப் படிக்கவிடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் சிறுபுத்தியோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்த பிரச்சாரம் திராவிட மாடல் அரசின் துரித நடவடிக்கைகளால் பிசுபிசுத்துபோனது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுத்துவரும் தமிழ்நாடு அரசை நேற்றைய தினம் உயர்நீதி மன்றமே பாராட்டியுள்ளது. பெண்களை பாதுக்காப்பதில் சிறிய சமரசத்திற்கும் முதலமைச்சர் இடம் தரமாட்டார். பெண்களுக்கு முதலமைச்சர் மீது இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல். அதை உங்களால் பொறுக்கமுடியாதுதான், ஆனால் அதை கொச்சைப் படுத்தும் வேலையில் இறங்காமல் ஆக்கப்பூர்வாக செயல் படுங்கள்! பெண்களை அச்சுறுத்த நினைத்து அரசியல் செய்யாதீர்கள்"
இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.