ஜூலை 21-ல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 21 ஆம் தேதி காலை 11 மணிக்குக் கூட உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஏப்ரல் 4ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் 2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்திய வேளையில், மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பு வந்துள்ளது.