‘தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று 4.1 மீ உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும்’ - INCOIS எச்சரிக்கை!
தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று 4.1மீ உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும் என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்தமிழக கடற்பகுதியில் குறிப்பாக குளச்சல் முதல் கீழக்கரை வரை இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை கடல் அலைகளின் உயரம் 0.6 முதல் 4.1 மீ உயரம் வரை இருக்கும்.
மேலும் தென் வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் 24-ம் தேதி வரைக்கும், மத்திய வங்கக் கடல் பகுதியில் 26ஆம் தேதி வரைக்கும், வட வங்கக்கடல் பகுதியில் 25 முதல் 27 வரைக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கப் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் விரைந்து அருகாமை கடற்கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையமும் தெரிவித்துள்ளது.