"அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்" - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"ராதாபுரம் வள்ளியூர் நாங்குநேரி உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் மூலக்கரைப்பட்டி ஏர்வாடி திருக்குறுங்குடி உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகள் களக்காடு நகராட்சி போன்றவைகளுக்கு நெல்லை மாவட்டம் மேல முன்னீர் பள்ளம் பகுதியில் தாமிரபரணி நதியிலிருந்து உந்துதல் நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். களக்காடு நகராட்சி உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவு பெற்று 48 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
தொகுதி சார்ந்த பிரச்சினை என்பதால் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து எங்களது கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. தவறு செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் முயற்சியை அரசு ஒருபோதும் செய்யாது. தவறு யார் செய்தாலும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை கட்டாயம் எடுக்கும். தனியார் நடத்தும் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் வகையில் 25 சதவீதம் மாணவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த திட்டத்தில் 50 சதவீத நிதி மத்திய அரசும் 50 சதவீதம் நிதி மாநில அரசும் வழங்க வேண்டும் ஆனால் அந்த நிதியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூபாய் 2190 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் சூழலில் அந்த நிதியை கேட்டு உச்ச நீதிமன்றம்
செல்லும் நிலை உருவாகி இருக்கும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். மக்களுக்கு விரோதமான துரோகமான காரியங்களை தொடர்ந்து செய்து வருவது நியாயமா என கேட்க வேண்டும்.
அதிகாரிகள் தவறு செய்தால் தவறு நடந்து விட்டது என தமிழக அரசு துறை சார்ந்தவர்களிடம் கேட்கும்போது தமிழக நிதியை தர மறுத்துவிட்டு வந்துள்ளீர்கள் என யாரும் கேட்கவில்லை. பிரதமர் மத்திய உள்துறை அமைச்சர் பிற மத்திய அமைச்சர்கள் யாரும் பத்திரிகையாளரை சந்தித்து பேச மறுப்பது எந்த வகையில் நியாயம். பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினால் மட்டும் தான் அரசு செய்யும் திட்டங்கள் மக்களுக்கு தெரியும் அப்படியானால் தான் உண்மை என்ன என்று மக்களுக்கு தெரியும் இதுவரை பத்திரிகையாளரை பாரத பிரதமரும் சந்திக்கவில்லை, உள்துறை அமைச்சரும் சந்திக்கவில்லை. தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி வந்து செல்வது அவர்களது முழு உரிமை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் செல்லலாம்" என தெரிவித்தார்.