கோலாகலமாக நடைபெற்ற வண்புருஷோத்தமன் கோயில் திருத்தேர் திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில், வியாக்ரபாதர் மகன் உபமணியும் தாய்ப்பால் நினைத்து அழ, பெருமாள் திருப்பாற்கடலை உண்டு பண்ணி பாலமுது ஊட்டியதாக ஐதீகம். ஆகையால் இங்கு வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க வண்புருஷோத்தமன் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
பிரமோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், வீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரடியிலிருந்து திருத்தேரில் பெருமாள் தாயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் கோவிந்தா நாமம் சொல்லி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு வீதிகளில் வலம் வந்த போது வீடுகள் தோறும் வழிபாடு செய்தனர். இந்த தேர்திருவிழாவில் உள்ளுர் மற்றும் வெளி ஊர்களிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். இதனை முன்னிட்டு திருவெண்காடு போலீசார், தீயணைப்பு வாகனத்துடன் பூம்புகார் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.