"பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள்" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
புதுக்கோட்டையில் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுகவினர் உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். முதல்வர் கூறியது போல ஏழாவது முறையாக மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும். தற்போது கருத்துக்கள் கேட்டபோது அரசு சார்பாக விடுபட்டது, எது எது செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறியுள்ளனர்.
அனைத்தையும் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன, முதல்வரிடம் எடுத்துக் கூறி அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதிமுக எப்பொழுதும் திமுகவை குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள் அவர்கள் குறை கூறினாலும் கடந்த 10 தேர்தல்களிலும் திமுக தான் வென்றுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெல்லும். பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
டெல்டா மாவட்டத்தில் 41 தொகுதிகள் கொடுத்துள்ளனர், அதில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவிற்கு சாதகமாக தான் உள்ளது. அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக போட்டி போட வேண்டும் என்று அனைவரும் கூறியுள்ளனர். நான் முடிவெடுக்க முடியாது முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும்
இவர்களுடைய கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துக்கூறுவேன். இருமுனைப் போட்டி இருக்குமா என்ற கேள்விக்கு எனக்கு அது குறித்து தெரியாது என்று தெரிவித்துள்ளார்.