IPL 2025 | பெங்களூரு போட்டி இடமாற்றம்.. காரணம் என்ன?
10 அணிகள் இடையிலான 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 17ம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய அட்டவணையை வெளியிட்டது.
அதன்படி, வரும் 23ம் தேதி நடைபெறும் பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே, பெங்களூருவில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 17ம் தேதி நடைபெற்ற கொல்கத்தா - பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக வரும் 23ம் தேதி நடைபெறும் பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான போட்டி லக்னோவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு தொடரின் இறுதிப்போட்டி மற்றும் 2வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக ஐபில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் முதல் தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.