மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தினார். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதல் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வந்தது. இதனால், அந்த மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றார்.
ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்தனர். மாணவி வாசலில் அமர்ந்து தேர்வெழுதிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. தனது மகளை வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மீது மாணவியின் தாயார் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். முதல்வர் ஆனந்தி தாளாளர் தங்கபாண்டியன் மற்றும் உதவியாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலையான பின்னர் அவர்கள் தினமும் காவல் நிலையம் வந்து கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.