மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆ தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது.
இதுவரை திரிமேணி சங்கமத்தில் 55 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருமேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்பவன் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.
இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.