முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்.22 கூடுகிறது!
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைவராக உள்ள முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் 22-ம் தேதி குமுளியில் நடக்கிறது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதிப்பதில்லை. இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவதுடன் சாலை அமைக்கவும் கேரள விடுவதில்லை, எனவே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகளை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு மேற்பார்வை குழு உடனடியாக கூடி சுமூக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது.
4-வாரத்தில் தீர்வு காண முடியாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் நீதிபதிகளின் உத்தரவாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள குமுளியில் வரும் 22ஆம் தேதி நடக்கிறது.
கூட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு வைக்கும் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். மேற்பார்வை குழுவினர் முல்லை பெரியாறு அணையையும் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்கிறார்கள்.
கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு மற்றும் கேரள அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சார்பில் மேற்பார்வை குழுவில் இடம் பெற்றுள்ள நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா மற்றும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்பார்கள். கேரளா சார்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் கலந்து கொள்வார்கள்.