“எல்லா வகையிலும் கழக அரசு உதவிகளை செய்திடும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அங்கு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சென்றிருந்தார். அங்கு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இது குறித்து அவர் தனது டிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராம மக்கள் 200 பேர் அங்குள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மக்களை சந்தித்து அவர்கள் ஊரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கேட்டறிந்தோம். மேலும், அவர்களுக்கு எல்லா வகையிலும் கழக அரசு உதவிகளை செய்திடும் என்று உறுதியளித்தோம்.
பேரிடர் நேரங்களில் மனிதநேயமே முன் நிற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மசூதியில் இடமளித்த நல்லுள்ளங்களுக்கு என் அன்பும், நன்றியும்.