இஸ்லாமியர்களோடு இஃப்தார் நோன்பு திறக்க தவெக தலைவர் விஜய் வருகை!
ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இஸ்லாமியர்களோடு மத நல்லிணக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோன்பு திறக்க உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து தவெக தலைவர் விஜய்யும் நோன்பு திறக்கவுள்ளார்.சரியாக மாலை 6:24 மணி அளவில் இஃப்தார் நோன்பு திறக்கப்பட உள்ளது. பின்பு மக்ஃரிப் பாங்கு சரியாக 6:28 மணி அளவில் நடைபெற உள்ளது. மக்ஃரிப் தொழுகை 6.35 மணிக்கும், இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இஃப்தார் விருந்து பரிமாறப்பட்ட உள்ளது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆகியவை விருந்தாக பேக்கிங் செய்யப்பட்டு கொடுக்கப்பட உள்ளது.
இதனிடையே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விஜய் வருகை தந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இஸ்லாமியர்கள் போல் தலையில் தொப்பி மற்றும் வெள்ளை நிற கைலி, சட்டை அணிந்து வந்துள்ளார்.