"விழாவை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி" - இளையராஜா!
இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. "சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழா குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில், "நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.