“ஜம்முவில் தீவிரவாதம் ஒழிக்கப்படும்” - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!
“ஜம்முவில் தீவிரவாதம் ஒழிக்கப்படும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு பிராந்தியத்தில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்களைத் தொடர்ந்து அந்த யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் அமித் ஷா தலைமையில் நேற்று (16.06.2024) உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயரதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பயங்கரவாதச் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி தரும் வகையில் செயல்படுமாறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி உள்ளது. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் கணிசமாக குறைந்துள்ளன. தீவிரவாதம் மூலம் இந்தியா மீது மறைமுகமாக போர் தொடுக்கப்படுகிறது.
இந்த போரை முழுமையாக முறியடிப்போம். காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும்.ஜம்முவிலும் தீவிரவாதம் ஒழிக்கப்படும்,
காஷ்மீரில் மக்களவை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு சதவீதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுத்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள். இவ்வாறு அமித் ஷா பேசினார்.