“தனிநபர் விதிமீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதா?” - டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
டாஸ்மாக் கடைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் அதனைத் தொடர்ந்த சட்ட நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் பதிலளிக்க அமலக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தினமீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பினர். மேலும் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்?. அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது. வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்தனர்.