"அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு" - அப்பாவு பேட்டி!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிதண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முடிவுற்ற குடிநீர் திட்ட பணிகள் புதிய திட்டப் பணிகள் ஆகிய குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் சகோதரர் மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழகம். மணிப்பூர் போல் பிரச்சினைகளை உருவாக்க ஒரு சிலர் முயற்சி செய்கின்றனர். இந்தியாவில் பொருளாதார ரீதியாக 9.6% அளவில் வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் தேசிய தலைவராக தமிழக முதல்வர் விளங்குகிறார். உலகளவில் இஸ்ரேல் காஸா போராக இருந்தாலும், இஸ்ரேல் ஈரான் போராக இருந்தாலும் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ள போரை தயக்கம் இல்லாமல் தட்டி கேட்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
கூட்டனியை மதிக்கும் கட்சி, கூட்டணியை மதிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின், ஒத்த கருத்து, ஒத்த கொள்கை உள்ளவர்கள் ஒரு அணியில் இருப்பார்கள் அது தான் தமிழக முதல்வரின் பலம் என்றார். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு குறித்து கருத்து தெரிவித்த சபாநாயகர், உள்ளத்தின் அடிதளத்தில் மதவெறியும் இன வெறியும் இருக்கின்றவர்கள் சொல்கின்ற வார்த்தைகளில் உண்மை இருக்கா என்று தெரியவில்லை, அவர்கள் வாயில் இருந்தும் வரும் வார்த்தைகள் நிரந்தரம் இல்லை" என கூறினார்.